அதிகாரச் சமாநிலையே நிரந்தரத் தீர்வு.
*********************************************
பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நாங்கள் ஒன்றையே சொல்லி வந்திருக்கின்றோம்.
அதாவது தற்போது தென்கிழக்கு என்று சொல்லப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் என்பதை அடித்தளமாகக் கொண்டு மட்டக்களப்பு, மன்னார், திருமலை, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய வடகிழக்கின் சகல மாவட்டங்களிலும் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இருக்கின்றார்களோ முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றை நிலத் தொடர்பற்ற வகையில் இணைக்கும் ஒரு அமைப்புதான் வேண்டும் என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்று எமது தலைவர் எம். எச். எம். அஷ்ரப் கூறியுள்ளார்.
தென்கிழக்கு மாகாண சபையை நாம் வலியுறுத்தவில்லை. தென்கிழக்கு மாகாண சபை தான் நாம் கேட்ட அகன்ற முஸ்லிம் மாகாண சபைக்குப் பதிலாக முன் வைக்கப்பட்டிருக்கின்ற தறிக்கப்பட்ட ஒரு அலகு.
இந்த நாட்டில் இன்னுமொரு இனப்பிரச்சினை வரக்கூடாது என்று நாம் பார்கிறோம். நாளைக்கு மாறி நின்று ஒருவர் கேட்கக் கூடும்.
தமிழர்கள் இவ்வளவு காலமும் போராட்டத்தைச் செய்து விட்டார்கள்.
ஆகவே நிபந்தனையற்ற வகையில் இணைக்கப்படும் வடகிழக்கினுள் இருந்து பாருங்கள் என்று யாரும் சொல்லலாம்.
அப்படிச் செய்ய முடியாது. ஏனென்றால் நாம் இருந்துபார்த்திருக்கின்றோம்.
வரதராஜாப் பெருமாளுடைய ஆட்சிக்காலத்தில் நாம் இருந்திருக்கின்றோம்.
அவருடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்கள் இருக்கிறது.
அதைப்போல பிரபாகரன் செய்த அநியாயங்களும் இருக்கிறது. ஆகவே முஸ்லிம்களுடைய அச்சம் பிழையானது என்று யாரும் சொல்ல முடியாது.
நாம் கேட்பதெல்லாம் தமிழர்களுடன் சமாதானமாக வாழ்வதற்கு ஒரு அதிகாரச்சமாநிலை.
இந்த சமநிலையை உறுதிப்படுத்தத்தான் நாங்கள் கேட்கிறோமே ஒழிய அதற்கப்பால் நாம் வேறெதுவும் கேட்கவில்லை.
தமிழர்களுடைய பிரச்சனை தீர்க்கப்படும் போது முஸ்லிம் மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்படல் வேண்டும்.
இதே நிலைப்பாட்டிலேயே தான் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அரசியல் யாப்பும் யோசனைகளை அரசுக்கு முன்வைத்துள்ளது.
எம். ரீ. ஹசன் அலி
செயலாளர் நாயகம்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு
Post a Comment