R. Sanath
28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் '20' இற்கு எதிராக போர்க்கொடி! 8 பேர் மட்டுமே ஆதரவு!!
'19' ஐ ஆதரித்த இ.தொ.கா, '20' இற்கும் நேசக்கரம்!!!
9ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராகவும், 8 பேர் ஆதரவாகவும் வாக்களிக்கவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் எம்.பி., வடிவேல் சுரேஷ் எதிராக வாக்களிக்கவுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினரான அங்கஜன், மொட்டு கட்சியில் உள்ள வியாழேந்திரன், தேசியப்பட்டியல் எம்.பி., சுரேன் ராகவன் ஆகியோரும் 20 இற்கு சார்பாக வாக்களிக்கவுள்ளனர்.
9 ஆவது பாராளுமன்றத்தில் பொதுத்தேர்தலில் மக்களின் அங்கீகாரத்துடன் 25 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர், தேசியப்பட்டியல் ஊடாகவும் மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கை வருமாறு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 10
தமிழ் முற்போக்கு கூட்டணி - 06
தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 02
ஈ.பி.டி.பி. - 02
தமிழ் மக்கள் தேசிய முன்னணி - 01
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 01
சுதந்திரக்கட்சி - 01
ஐக்கிய மக்கள் சக்தி - 01
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 04
அதேவேளை, 8 ஆவது நாடாளுமன்றத்திலும் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகித்தனர், அவர்கள் அனைவரும் 19 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment