முஸ்லிம் கட்சிகள் மஹிந்தவின் அழைப்பை புறக்கணிப்பது சிறந்ததல்ல...
Posted by aljazeeralanka.com on May 03, 2020 in | Comments : 0
" கல் விளையாடும் போதும் வெல்ல விளையாட வேண்டும் " என்றதொரு முதுமொழியுண்டு. நாம் என்ன செய்தாலும் எமது காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கொரோனா சம்பந்தமான ஒரு கலந்துரையாடலுக்கு அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளார்கள். இவ் அழைப்பை மு.கா, அ.இ.ம.கா ஆகிய முஸ்லிம் கட்சிகள் இரண்டும் புறக்கணிக்கும் என்றே நம்பப்படுகிறது. அமைச்சர் ஹக்கீம் ஊருக்கு முதலே தனது கட்சி கலந்து கொள்ளாதென அறிவித்துள்ளார். முஸ்லிம் கட்சிகளின் இந்த தீர்மானம் இன்றைய நிலையில் சமூகத்துக்கு பொருத்தமானதாக ஒரு தீர்மானமாக இருக்காது.
இவ் அழைப்பை விடுத்துள்ள மஹிந்த இந் நாட்டின் பிரதமர். அவர் ஒரு இலங்கை பிரஜையை, ஒரு பிரச்சினையின் தீர்வை நோக்கிய கலந்துரையாடலுக்கு அழைத்தால், அப் பிரஜை அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவருக்குள்ள கடமை. அந்த வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது அழைப்பை ஏற்பதே பொருத்தமானது. தற்போது கலைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவிர்ந்து வேறு சில மக்கள் பிரநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதனை ஒரு பரந்துபட்ட மக்கள் பிரதிநிதிகளினூடான சந்திப்பாக கருதியாவது பிரதமர் மஹிந்த அழைப்பு விடுத்த அனைவரும் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதே பொருத்தமானது.
இவ்வரசு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடிப்பது மறுக்க முடியாதது. இதனை எவ்வாறு குறைக்கலாம் என்ற கோணத்திலேயே எமது முஸ்லிம் கட்சிகளின் நகர்வுகள் அமையப்பெறுதல் வேண்டும். இவ்வாறான அழைப்பை புறக்கணிக்கும் போது இவ்வரசின் முஸ்லிம்களுக்கெதிரான போக்கு இன்னும் கடுமையாக வாய்ப்புள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கும் இவ்வரசுக்கும் இடையிலான முரண்பாடு இன்னுமின்னும் அதிகரிக்கும். இதனால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமூகமே! இந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் கட்சிகள் இவ்வரசுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்குமிடையிலான உறவை வளர்க்கும் சந்தர்ப்பமாக பயன்படுத்தலாமல்லவா? இதுவல்லவா எமக்கு தேவை? இதில் கலந்துகொள்வதால் என்ன நஸ்டம் எம் சமூகத்துக்கு வந்துவிடப் போகிறது? எங்களது கட்சி பங்குகொள்ளாதென முந்திக்கொண்டு அறிக்கை விடும் போது, இந்த சந்தர்ப்பத்திலும் புதினம் காட்டுகிறார்களேயென சிங்கள மக்களின் கோபமும் எம் மீது திரும்ப வாய்ப்புள்ளது.
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடலை எரிக்கும் பிரச்சினை எழுந்த போது, முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று அன்று பிரதமர் மஹிந்த முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார். குறித்த விடயத்தால் நன்மை ஏற்பட்டதோ, இல்லையோ, அவர், அவருடைய நாகரீகத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் எமது பிரதிநிதிகளை அழைக்கும் போது புறக்கணிப்பது நாகரீகமல்ல. இது பிரதமர் மஹிந்தவை அகௌரவப்படுத்துவதாக அமைந்துவிடும். இங்கு சென்றும் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது பற்றி பேசலாமல்லவா?
குறித்த நிகழ்வில் த.தே.கூ கலந்துகொள்ளும் என அதன் பங்காளிக் கட்சியொன்று கூறியுள்ளது. அக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக தெரியவில்லை. அவர்களுக்கு குறித்த கலந்துரையாடலுக்கு செல்ல முடியுமென்றால், ஏன் எமது கட்சிகளுக்கு செல்ல முடியாது. சஜித் கூட்டணியில் எமது கட்சிகளும் பங்காளிகளாக இருப்பதில் தவறில்லை. அடிமையாக இருக்க கூடாது. அண்மையில் நாம் எதிர் நோக்கிய எந்த பிரச்சினைக்கும் சஜித் வாய் கூட திறக்க இல்லை. அவர் பிரச்சினையை அதிகரிக்காமல் இருந்து எமக்கு ஆதரவு வழங்கியதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. எமது பிரச்சினையை எம்மவர்களே முன்னின்று தீர்க்க முயன்றார்கள். எமது பிரச்சினை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டுமாக இருந்தால் சஜித் கூட்டணிக்கு அப்பால் வேறு சில நகர்வுகளும் எமக்கு அவசியம். அவ்வாறான ஒன்றாகவே இவ் அழைப்பையும் நோக்க வேண்டும்.
பாராளுமன்றமே கூட்டப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே பிரதமர் மஹிந்தவின் அழைப்பை புறக்கணிப்பதாக அறிய முடிகிறது. இதில் கலந்துகொண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அழுத்தத்தை வழங்கலாமே! இது ஒரு தேசிய பிரச்சினை. இதனை பெரும்பான்மையினர் பார்த்துக்கொள்வர். என்னைப் பொறுத்த வரையில் எமது முஸ்லிம் கட்சிகள் சற்று அடக்கி வாசிப்பதே உகந்தது. நாமின்னும் எதிரிகளையும், வெறுப்புக்களையும் சம்பாதிப்பது எம் சமூகத்துக்கு உகந்ததல்ல.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment