இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் கடந்த ஆட்சியாளர்களாக இருந்திருந்தால் இன்று நாடு படு மோசமான நிலைக்கு போயிருக்கும். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தினதும் இராணுவம் மற்றும் பொலிசாரினதும் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன்று நாடு மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. எந்த இடத்தில் எப்போது கொரோனா தாக்குதல் தொடுக்கும் என்ற அச்சத்தில் நாட்டு மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சவால் மிக்க நேரத்தில் எந்தவித பதட்டமும் இன்றி நாட்டின் தலைவர் மிக சிறப்பாக நாட்டை நிர்வகிப்பதை காண்கிறோம். அவருடன் இராணுவமும் பொலிசும் இணைந்து மிகச்சிறந்த முறையில் மக்களை கோரானாவிலிருந்து காப்பாற்ற அர்ப்பணிப்புடன் போராடுவதை காண்கிறோம்.
கடந்த வருடம் இந்த நாடு பாரிய பயங்கரவாதத்தாக்குதலுக்கும் அதன் பின்னர் அப்பாவி முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கும் முகம் கொடுத்தது. பயங்கரவாதிகள் தாக்கப்போகிறார்கள் என்று தெரிந்தும் வாழாவெட்டியாக இருந்த தலைவர்களைத்தான் நாடு கண்டது. அதே போல் இனவாதிகளின் அப்பாவிகள் மீதான தாக்குதலை தடுக்க முடியாமல் ராணுவமும் பொலிசும் புதினம் பார்க்க வைக்கும் தலைவர்களையே கொண்டிருந்தது.
ஆனால் நமது நாட்டில் கொரோனாவுக்கான சமிக்ஞை கிடைத்ததும் அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுத்தது. முடிந்தளவு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சிறந்த நடவடிக்கைகளுக்கு பிரதான காரணம் கோட்டாபய ராஜபக்ஷ என்ற சிறந்த, நிர்வாக திறமையுள்ள ஜனாதிபதியாகும்.
Post a Comment