9ஆவது ரக்பி உலகக்கிண்ண தொடரில் தென்னாபிரிக்கா அணி,
மூன்றாவது முறையாக மகுடம் சூடியுள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற மகுடத்திற்காக இறுதிப் போட்டியானது, இன்று (சனிக்கிழமை) யோகோஹாமா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில், நடப்பு சம்பியன் நியூஸிலாந்து அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணியும், வேல்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாபிரிக்க அணியும் களத்தில் மோதிக் கொண்டன.
இதில் இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக உலகக்கிண்ணத்தை ஏந்தும் முனைப்பிலும், தென்னாபிரிக்கா அணி மூன்றாவது முறை உலகக்கிண்ணத்தை ஏந்தும் ஆர்வத்திலும் மோதின.
இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், 32-12 புள்ளிகள் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியின் மூலம் ரக்பி உலகக்கிண்ண தொடரில், தென்னாபிரிக்கா அணி, மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.
இதற்கு முன்னதாக தென்னாபிரிக்கா அணி 1995ஆம் மற்றும் 2007ஆம் ஆண்டும் சம்பியன் பட்டம் வென்றது. மேலும், 1999ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மூன்றாமும் இடம் பிடித்தது.
இதேபோல தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, 2003ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்றது. மேலும், 1991ஆம் மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இரண்டாவது இடம் பிடித்தது. தற்போதும் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், மூன்று முறை உலக சம்பியன் பட்டம் வென்ற நியூஸிலாந்து அணி, ஒருமுறை மூன்றாம் இடம் பிடித்த வேல்ஸ் அணியை வீழ்த்தி இத்தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்தது.
நியூஸிலாந்து அணி, இதற்கு முன்னதாக 1987ஆம், 2011ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டமும், 1995ஆம் ஆண்டு இரண்டாவது இடமும், 1991ஆம் 2003ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.
வேல்ஸ் அணி, 1987ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ரக்பி உலகக்கிண்ண தொடரில், முதல்முறையாக மூன்றாம் இடம் பிடித்தது. இம்முறை நான்காம் இடம் பிடித்தது.
ஆதவன்
Post a Comment