ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
கழிவு முகாமைத்துவத் திட்டத்தில்
மினுவாங்கொடைக்கு முதலாமிடம்
( மினுவாங்கொடை நிருபர் )
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் மேல் மாகாணத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, மினுவாங்கொடை நகர சபை முதலாம் இடத்தைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
இந்த ஆய்வு நடவடிக்கை, மேல் மாகாண அரச முதலீட்டு உறுப்பினர்கள் சபையினால் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், இந்தச் சபையின் விசேட புகழாரத்தையும் பெற்றுள்ளது.
கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான இத்திட்டம், மினுவாங்கொடை நகர சபையினால் 2015 ஆம் ஆண்டிலேயே முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டதாகவும், இரண்டாவது முறையாக 2016 ஆம் வருடத்தில் செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் சிறப்புத் தன்மையைப் பாராட்டும் முகமாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விசேட கெளரவ விருதும் வழங்கப்பட்டதாக, மினுவாங்கொடை நகர சபை செயலாளர் எச்.வீ.எஸ். ரத்னலதா தெரிவித்தார்.
மினுவாங்கொடை நகரத்தை கழிவுப் பிரச்சினைகளின்றி, தூய்மையான நகரமாக மாற்றியமைத்து, இரண்டு வருடங்களுக்குள் இரண்டு கோடி ரூபாவை மீதப்படுத்தியதன் காரணமாகவே, மினுவாங்கொடை நகர சபை மேல் மாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மினுவாங்கொடை நகர சபை, கழிவு முகாமைத்துவத்தை, நூறு வீதம் திறமையாகவே செய்கிறது. நகரத்தில் சேர்க்கப்படும் கழிவுகள் ஒருபோதும் சுற்றாடலில் கொட்டப்படுவதில்லை. இது தொடர்பில், பொது மக்களினது பூரண ஒத்துழைப்பும், நகர சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களினது அயரா முயற்சியும் கிடைத்தமையே, இப்பாரிய வெற்றிக்குக் காரணம் என்றும் நகர சபை செயலாளர் குறிப்பிட்டார். கிராம சேவகர் பிரிவுகள் 6, நகர எல்லைப் பிரதேசத்தின் அளவு நான்கரை கிலோ மீற்றர் உள்ளடங்கியவாறு அமையப்பெற்றுள்ள மினுவாங்கொடை நகர சபை எல்லைக்குள், 2300 வீடுகளும், 1100 வர்த்தக நிலையங்களும் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment