கொழும்பிலும் நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு அதிகம் பரவுவதால் அதனை கட்டுப்படுத்துமுகமாக சுகாதாரத்தை பேணாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா வேண்டிக்கொண்டார்.
அவரது அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்த போது, கொழும்பு மாவட்டத்தை பொறுத்த வரை தெஹிவல கல்கிஸ்ஸ போன்ற இடங்களிலும் நாட்டின் வேறு பிரதேசங்களிலும் டெங்கு நோய் அதிகம் பரவிக் கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு சரியான அறிவுறுத்தல் வழங்க வேண்டியுள்ளது.
டெங்கு நோய் பரவ காரணமாக செயற்படுவோருக்கு தண்டப்பணம் அறவிடும் நடைமுறையே தற்போது உள்ளது. பொது மக்கள் நன்மை கருதி இப்படிப்பட்டவர்களுக்கு சிறை தண்டனை வழங்கக்கூடிய வகையில் அமைச்சரவை பத்திரம் கொண்டு வருவதற்கும் நான் தயாராக உள்ளேன்.
அதே போல் ஊடகங்களும் இது விடயத்தில் பொது மக்களுக்கு டெங்கு அபாயம் பற்றி தெளிவூட்டுவதில் எமக்கு உதவ வேண்டும். ஊடகங்கள் மூலமாக இது பற்றிய பிரச்சாரங்களை கொண்டு செய்வதற்கும் நாம் தயாராக உள்ளோம் என்றார்.
இங்கு கருத்துக்கூறிய தெஹிவல கல்கிஸ்ஸ பிரதேச சுகாரார உத்தியோகத்தர் கழிவுகளை எடுப்பதற்குரிய வாகனங்கள் மிக பழமையானவை என்றும் புதிய வாகனங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா வாகனங்களுக்குரிய ஏற்பாடுகளை தமது அமைச்சு மூலம் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
Post a Comment